தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியான திமுக முன்னிலை வகித்தும் வெற்றி பெற்றும் வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியான 23-வது வார்டில் திமுக வெற்றிப்பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ள 23-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் 1,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். இந்த வெற்றியினால் அந்த வார்டில் உள்ள அதிமுகவினர் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்கள் யார் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.