சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐந்து காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலையில் மழை ஓய்ந்து தற்போது வெயில் அடித்து வருகிறது. இதனால் சின்னம்மை பரவி வருகிறது.
மும்பை, அகமதாபாத், ராஞ்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐந்து காவல் துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட காவல்துறையினர் அவரவர் வீடுகளுக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். மேலும் காவலர்கள் விடுதி அமைந்துள்ள பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படுள்ளது.
மேலும் சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கி இருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, அவர்கள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக அனைத்து காவல்துறையினரும் முகக் கவசம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்களும் முடிந்த அளவு முக கவசம் அணிய வேண்டும் எனவும், சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
பம்பையில் இருந்து நிலக்கரி செல்ல கேரள அரசு பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. பேருந்து புறப்பட்ட பின் டிக்கெட் கொடுப்பதில் உள்ள சிரமத்தை போக்குவதற்காக, பம்பை மணல் பரப்பில் கேரள அரசு போக்குவரத்து கழகம் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் இந்த கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிய பின் பம்பை பெரிய பாலம் வழியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை இருக்கும் இடத்திலிருந்து நிலக்கல் பேருந்தில் ஏறி பயணம் செய்ய முடியும்.
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக டிச.5 முதல் சென்னை-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்