சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி பிரிவு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலையில் 3.30 மணி அளவில் அங்குள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள கொரோனா சிகிச்சை பிரிவு அறையில், 5 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.
பிறகு, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அங்கு பற்றி எரிந்த தீயைப் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக ஏ.சி.யில் தீப்பிடித்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.