சினிமா எடுப்பது கத்தி மேல் நடப்பது மாதிரி என இராவண கோட்டம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயரை பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்தான், ‘இராவண கோட்டம்’.
இப்படத்தில் நடிகர் சாந்தனு, நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார்.
மதயானைக்கூட்டம் பெற்ற படத்தின் வரவேற்பு காரணமாக, இராவண கோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 18-ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், லைகா தயாரிப்பு நிறுவன தலைவர் சுபாஷ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது;
தமிழ் மொழி, இலக்கியம், போர்கள், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி நாங்கள் மேடைதோறும் பேசி இருக்கிறோம். கேட்டவர்களுக்கு மட்டுமே அது புரியும். ஆனால், ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் எங்கோ வயலில் வேலை பார்க்கிறவர்களுக்கும், மாடு மேய்ப்பவர்களுக்கும் தெரியாது. ஆனால், தற்போது அவர்களுக்கு எல்லாம் ‘பொன்னியின் செல்வன்’ யாரென தெரிய வைத்த மகத்தான சரித்திர புருஷர் சுபாஸ்கரன்.
அவர் என்னிடம், ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குகிறேன் என்றார். அந்த கதையை நான் பத்து முறை படித்தவன். அதனால், ‘‘அது சினிமாவுக்கு சரிப்பட்டு வராது, வேறு கதையை எடுங்கள்’’ என்றேன். அவர், ‘‘பரவாயில்லசார், தமிழுக்காக இந்த படத்தைதயாரிக்கிறேன்’’ என்றார். அது தமிழுக்கான படம், தமிழர்களுக்கானபடமாக மாறியதில் மகிழ்ச்சி. என் பேச்சை கேட்காமல் எடுத்ததால், படம் வெற்றி பெற்றது.
அதேபோலதான் இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடமும், ‘‘உங்களுக்கு எதற்கு இந்த வேலை?’’ என்றேன். சினிமாவில் கதை சொல்பவர்கள், அப்படியே நூறு நாள் ஓடுவதுமாதிரியே சொல்வார்கள். சினிமா எடுப்பது கத்தி மேல்நடப்பது மாதிரி.
சினிமாக்காரர்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன். என் தலைவர் சினிமாக்காரர். என்னை வளர்த்த எம்ஜிஆர் சினிமாக்காரர். ஆனால், நான் சினிமா எடுக்கவில்லை. சுபாஸ்கரன்போல இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் என் பேச்சை கேட்காமல் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதனால் இந்த படமும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்சப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?