ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பிராமணர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக பீகார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பிராமண சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக வழக்கறிஞர் சுதிர் குமார் ஒஜா என்பவர் பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற துறவியும் மத மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ரவி தாசர் பிறந்த நாள் நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மராத்தி மொழியில் உரை ஆற்றியதாகவும் அவரது உரை பல பத்திரிகைகளில் வெளி வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த உரையில், பண்டிட்கள் இந்து மதத்தில் நிலவும் கடுமையான சாதிய படிநிலைகளை உருவாக்கியதாக பேசி இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் இந்தப் பேச்சு பிராமணர்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கத்தில், பண்டிட்கள் என்ற வார்த்தை மூலம் எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் மோகன் பாகவத் குற்றம் சாட்டவில்லை என்றும், பண்டைய காலத்தில் சாதிய படிநிலைகளை ஆதரித்து, அதை ஏற்றுக் கொண்டவர்களை மட்டுமே அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் பிராமணர்கள் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதாக சில ஊடகங்கள் தான் எழுதி இருப்பதாகவும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக மகளிர் ஐபிஎல்; ஏலத்தில் 400-க்கும் அதிகமான வீராங்கனைகள்!