மராட்டிய மாநிலத்தில் கடந்த 10 நாள்களில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிம்பால்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 60 வயதான விவசாயி ராஜீவ் பாபுராவ் ஜுத்பே. இவர் தனது விவசாய நிலத்தின் அருகேயுள்ள மரத்தில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் துறையினர் அவரது மகனிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் கடன் வாங்கி 2.5 ஏக்கர் நிலத்தில் அவர் விவசாயம் செய்து வந்ததாகவும், மழையால் ஒரே நாளில் அனைத்துப் பயிர்களும் நாசமானதால், மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீரன் பட பாணியில் பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் – கெத்து காட்டிய காவல்துறை
இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி லோகாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வர்தாஸ் நாராயண்தாஸ் பங்கர் (52) கடன் சுமையாலும், பயிர் இழப்பாலும் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, கடந்த 4-ம் தேதி அம்பாதா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விட்டல் உமார்கர் (62), தாண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர்ராம் ஷியாமா (36) ஆகியோர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 3-ஆம் தேதி உம்ரி கிராமத்தைச் சேர்ந்த அசோக் நீலகாந்த் சார்வே (35) கடன் பிரச்னையால் தற்கொலை செய்துக்கொண்டனர்.
மேலும், மராட்டியத்தில் 2001 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 32 ஆயிரத்து 605 விவசாயிகள் என்ற அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும், இது ஆண்டுக்கு சராசரியாக 1,716 என்ற அளவில் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.