சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை பரம்பு பகுதியில், கடந்த 2020-ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021-ம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.
முதற்கட்ட அகழாய்வில், 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள், செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழாய்வுப் பணிகளில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமார் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு தமிழர்களுக்கு பெருமைமிகு தருணமாக அமைந்தது.
இதுகுறித்து, முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிரபரணிக்கரை ‘பொருநை நாகரிகத்தின்’ வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடப் பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
இந்த மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின்போது, வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், முத்திரைகள், எலும்பாலான கூர்முனை கருவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பராக்கிரம்பாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது, இந்த மூன்று கட்ட அகழாய்வுகளில், முதன் முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வணிக விமர்சனம்