ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா குறித்து சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம், தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 61 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பல புகார்கள் வந்தாலும், இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்தப் புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நடக்கும் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொளிகள் பகிரப்பட்டாலும், அவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், பணப்பட்டுவாடா குறித்து சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்..அச்சத்தில் மக்கள்