பால் விலை உயர்வு காரணமாக டீ, காபி போன்ற பால் சார்ந்த பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாகவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் ஆவின் பால் விலை கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், “ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.
இதையும் படிங்க: போலி கணக்குகள்..’ப்ளூ டிக்’ கட்டணம்…மீண்டும் வேலைக்கு வர அழைப்பு: அதிரடி காட்டும் எலான் மஸ்க்!
இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.
நாளை மறுநாள் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் விலை இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த இந்த நிலையில், பால் சார்ந்த பொருட்களான டீ, காபி போன்றவற்றின் விலை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் பால் விலை உயர்வால், டீ தூள், காபி தூள், சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனிடையே மதுரை மாவட்டத்தில் உள்ள டீ கடைகளில் டீ, காபி விலையை 15 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட டீ, காபி வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த விலை உயர்வு தமிழகம் முழுவதும் பரவலாம் என சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தற்போது பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.