சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் அடிப்படையில், ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரின் முன்மொழியை பரிசீலித்து, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.