தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களின் 7 வட்டங்களில் எண்ணெய் வளத்தை கண்டறிவதற்காக எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் அவர்கள் அறிக்கையில், காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் கிணறுகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும், புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் திட்டமும், அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 30 எண்ணெய் கிணறுகளைத் தோண்ட 2015 ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட போது, காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்படவில்லை என்றும் அதன்பிறகுதான் பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் அதன்படி காவிரிப் படுகையில் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முடியாது என்றும் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தவுள்ள 9 எண்ணெய் கிணறுகள் திட்டம் சட்டவிரோத திட்டமாகவே கருதப்படும் எனவும் வேளாண்மையை அழிக்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கக் கூடாது எனவும் தன் அறிக்கையில் கடிந்துள்ளார், இராமதாஸ்.
“காவிரி பாசன மாவட்டங்களில், 200-க்கும் மேற்பட்ட கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மற்றொருபுறம் வறட்சி, மழை போன்ற இயற்கை சீற்றங்களாலும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மேலும் 9 எண்ணெய் கிணறுகளை அமைப்பது காவிரி படுகை பாலைவனமாக மாறுவதை விரைவுபடுத்தவே வழி வகுக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களின் பயனாக காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கமே காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்; வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழில் திட்டங்களை தடுக்க வேண்டும் என்பது தான் என்றும் இந்த நோக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.