திமுக அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கினார்.
மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழக அளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதலிடத்தில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கையில், மதுரை எய்ம்ஸ் கட்டட வடிவமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவரது உதவியாளர் அவரை எழுப்பும் வகையில், சாமர்த்தியமாக செல்லிடப்பேசியை அவரிடம் கொடுத்து தூக்கத்தை கலைத்தார். இந்தச் சம்பவம் முழுக்க காணொளியாக பதிவாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்