குரங்கம்மை நோய் பரவலை தடுக்கும் விதத்தில் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் வெளிப்படுவதை காணமுடிகிறது. எனவே இதைத்தொடர்ந்து நாட்டின் தலைநகரான தில்லியிலும் மற்றும் கேரள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய இந்த வைரஸின் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தில்லி மற்றும் கேரள விமான நிலையங்களில் சுகாதாரத்துறை பணியாளர்கள் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருக்கும் நபர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த பின்னரே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
கொரோனாவின் ஆட்டமே இன்னும் முடியாத நிலையில், இந்த குரங்கம்மை வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கம்மை நோயை தடுக்க மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.