அரிசி, சர்க்கரைக்கு பதில் அதற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், பொதுமக்கள் புது ஆடைகள், பட்டாசுகள், பாத்திரங்கள் என பொருள்களை வாங்குவதற்கு கடைகளில் குவிந்து வருகின்றனர்.
மாநில அரசுகள் தீபாவளிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் தீபாவளிக்காக ஒவ்வொரு ஆண்டின் போதும், பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்கிறது. இந்த வருடமும் புதுச்சேரி அரசு சிறப்பு அங்காடியை ஏற்பாடு செய்துள்ளது. இதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்துவைத்தார்.
இந்த அங்காடியில், இந்த ஆண்டும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருள்கள் கொண்ட தொகுப்பு ரூ.800-க்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ‘தீபாவளி பண்டிகையையொட்டி, நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில் அதற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: இபிஎஸ் வெளியே, ஓபிஎஸ் உள்ளே…. நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை