நடிகர் தனுஷ் போண்டா மணிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
திரையுலகை பொறுத்தவரையில் உச்சத்தில் இருக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக பல நடிகர், நடிகைகளின் வாழ்வு இருந்துள்ளது. வெளிப்பார்வைக்கு பிரமாண்டமாக தெரிந்தாலும், திரையுலகிலும் மற்ற தொழிலுலகில் இருப்பது போல பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், போண்டாமணி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் போண்டாமணிக்கு பிரத்யேக இடமுண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக போண்டாமணிக்கு படவாய்ப்புகள் வருவது மிகவும் குறைந்துவிட்டன.
இந்நிலையில், தற்போது நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவரத்தை முதலில் போண்டாமணியின் சக நடிகரும், வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் உள்ள மற்றொருவருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க ஒரு காணொளியின் வாயிலாக தெரிவித்தார். மேலும், உயிருக்கு போராடும் அவருக்கு நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போண்டா மணியை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் போண்டா மணிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு போண்டா மணி நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, நடிகர் விஜய் சேதுபதி போண்டா மணிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு