சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் பள்ளி சிறுவன் ஒருவன் பேருந்தில் சாகசம் செய்த காணொளி தற்போது வைரலாகி உள்ளது.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் பள்ளி சிறுவன் ஒருவன் பேருந்தில் தொங்கிக்கொண்டு, சாலையில் தனது காலை தேய்த்துக்கொண்டு சென்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்தக் காணொளியை பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர். மேலும், சமூக ஆர்வலர் ஒருவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இந்தக் காணொளி குறித்து புகார் அளித்ததன்பேரில், ஆய்வாளர் சங்கரநாராயணன் அந்த காணொளியை வைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
அப்படி ஆய்வு செய்ததில், பிராட்வேயில் இருந்து மணலியை நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் (தடம் எண் 44) தொங்கியபடி, சாலையில் காலை தேய்த்து தொங்கிக்கொண்டு சென்றது திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்தச் சிறுவன் கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அந்தச் சிறுவனை கைது செய்த காவல்துறையினர், அவனை தண்டையார்பேட்டை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்ட அச்சிறுவன், இனி இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என்று கூறியதையடுத்து நீதிபதி, மீண்டும் சிறுவன் வருகிற 10 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.
கடந்த சில மாதங்களாகவே ரயில் மற்றும் பேருந்துகளில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டும், கத்தியை வைத்து தேய்த்துக்கொண்டும் பயணிகளை மிரட்டி செல்வது சமூக வலைதளங்களில் காணொளிகளாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களால் பயணிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதனால், காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேருந்து நிலையங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி…