ஆறுமுகசாமி ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் இறுதியில் இடம்பெற்றுள்ள திருக்குறள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு முதலில் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின்பு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல் இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை; அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தால் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் இறுதியில் திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது. இடம்பெற்றுள்ள திருக்குறானது,
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
பொருள்;
பாகனுக்கு அடங்காத, வேல் வீரர்களைக் குத்திக்கொல்லும் தந்தங்கள் கொண்ட யானைகள் கால் புதையும் சேற்றில் அகப்பட்டுக்கொண்டால், அவற்றை நரியும் கொன்றுவிடும்.
இந்த திருக்குறள் யாரை குறிப்பிடுகிறது என்று தற்போது பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. யார் நரி? யார் யானை? யார் பாகன்? போன்ற கேள்விகள் எழும்ப, பலதரப்பட்ட விடைகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் செய்தாரா சசிகலா? – வெளிவந்த திடுக்கிடும் தகவல்