தூத்துக்குடியில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நடந்தது. அக்கட்சியினர் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையில் கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கூட்ட அரங்கத்தில் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது, கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு நல்ல நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்றார்.
அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்? ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது. காங்கிரசும் போட்டியிட்டது. இதை ஏன் நீங்கள் பேசி முடிக்கவில்லை? இப்படி இருந்தால் எப்படி கட்சி பலப்படும்? என்றார்.
அப்போது 34வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் எழுந்து குறுக்கிட்டு பேச, முத்துவிஜயா தரப்பிற்கும் ஏ.பி.சி.வி சண்முகம் ஆதரவாளரான சந்திரபோசுக்கும் இடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் தள்ளுமுள்ளானது. இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டது.
உடனே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து முத்துவிஜயா கூட்ட அரங்கில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே சென்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உள்கட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகின் மிக நீளமான தாவரம் கண்டுபிடிப்பு! ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள்!