விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை வழங்க அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அடுத்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், தேர்வு நேரத்தில் சலுகை கோரும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே சலுகையை வழங்க அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்ப்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், மருத்துவ சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து சலுகை வழங்கலாம்.
மருத்துவ சான்றிதழ்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தேர்வு எழுதிய பின்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு சான்றிதழை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்; களைகட்டப் போகும் நேரு ஸ்டேடியம்..