காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.
காமன்வெல்த் போட்டிகளில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற மல்யுத்த போட்டியில், இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா, ஷாக்சி மாலிக், தீபக் புனியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
அதன்படி, ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா, கனடாவின் லச்லான் மௌரிஸ் மெக்னீல் என்பவரைத் தோற்கடித்தார். இறுதிச்சுற்று வரை 3 சுற்றுகளில் களம் கண்ட பஜ்ரங், அவற்றில் மொத்தமாகவே 2 புள்ளிகளை மட்டுமே எதிராளிகளுக்கு விட்டுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த்தில் இதுவரை, பஜ்ரங் புனியா மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் தீபக் புனியா-பாகிஸ்தானின் முகமது இனாமை தோற்கடித்து தங்கம் பதக்கம் பெற்றார். காமன்வெல்த் போட்டியில், இதுதான் இவர் பெறும் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில், சாக்ஷி மாலிக் – கனடாவின் அனா பௌலா காடினெஸ் கொன்ஸால்ஸை வீழ்த்தி, இவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அன்ஷு மாலிக் – நைஜீரியாவின் ஒடுனயோ ஃபொலாசேட் அடேகுரோயேவிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) முடிவில் 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு