கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், டவுன் ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை அங்கிருந்த காரில் சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி பலியானார்.
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் ஆணிகள், கோலிகுண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26 ஆகிய நபர்களை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனின் உறவினரான அப்சர் கான் என்ற நபரை நேற்று நள்ளிரவில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், கோவைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் வழக்கின் தகவல்களை சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முந்துங்கள்.. தெற்கு ரயில்வேயில் பயிற்சியுடன் புதிய வேலைவாய்ப்பு