வண்ணார்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அதே சங்கத்தின் தலைவரும் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது.
இந்த சங்கம் இயங்கி வரும் கட்டத்தில் இருந்து புகை வருவதாக கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) அதிகாலையில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இதில், அங்குள்ள கோப்புகள் சில தீயில் எரிந்து சேதமாகின.
இதைத் தொடர்ந்து, தீ விபத்து குறித்து சங்கத்தின் செயலர் மந்திரமூர்த்தி பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது தீ விபத்து நடந்த சங்க அலுவலகத்தில் கதவு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அச்சங்கத்தில் வேலை செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த விபத்துக்கும் சங்கத் தலைவர் பிரபாகரன் (55), தற்காலிக ஊழியர் தினேஷ் (35) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசுக் கோப்புகளை அழிக்க முயன்றதாக அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?