சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பணக்கட்டுகளை மலைப்போல் குவித்து வைத்து தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் நிறுவனம் தான் ஹெனன் மைன். இந்த நிறுவனம் கொரோனா காலக்கட்டத்திலும் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. கனரக வாகனங்களை தயார் செய்யும் இந்த நிறுவனம், இந்தியா உள்பட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் ஆக இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரத்து 86 கோடி ரூபாய் ஆகும். இதனால், மகிழ்ச்சி அடைந்த இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் அதாவது சுமார் 73 கொடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணக்கட்டுகளை குவித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் போனசாக வழங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் ஆகும்.
இதுமட்டும் இன்றி, நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 18 லட்சம் வரை பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் 2 பேர் கை நிறைய பணக்கட்டுகளை அள்ளி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் உலவி வருகிறது.