இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு சென்ற இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் விசைப்படகில் இருந்த மீனவருக்கு வயிறு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட மீன்வருக்கு நிவாரணம் மற்றும் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: படகை நிறுத்தாமல் சென்றதால் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு! அதிர்ச்சியில் மக்கள்
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், த/பெ. காசிராஜன் என்பவர், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் மீனவர் திரு.வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.