ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி எதிர்ப்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். நடந்துக்கொண்டிருக்கும் 15-ஆவது ஐபிஎல் தொடரின் ஏழாவது ஆட்டமாக சென்னை அணியும் லக்னோ அணியும் மோதிக்கொண்டது.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், அனைவரும் எதிர்ப்பார்த்தபடியே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால் பந்துவீச்சுத் தேர்வு லக்னோ அணிக்கு சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை.
உத்தப்பாவின் வெறித்தனம்
உத்தப்பா தனது ஆட்டத்திறனை கேள்விக்கேட்டவர்களுக்கு முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை அடித்து, அதன் மூலம் பதில் கூறினார். ஆனால் எதிர்ப்பாரா விதமாக ருத்ராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டை ரன்அவுட்டில் பறிகொடுத்தார்.
இதன்பின்பு, சென்னை அணியில் ஸ்கோர் சேர்ப்பு வேகம் குறையும் என்று பலரும் நினைக்க, அந்த நினைத்தலை தகர்த்தது மொயின் அலி மற்றும் உத்தப்பா ஜோடி.
அணியின் ஸ்கோர் 83 ஆக இருக்கும் பட்சத்தில் உத்தப்பா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். உத்தப்பா ஆடிய ஆட்டமென்பது வெறித்தனமானது என்றே கூற வேண்டும். 27 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அவர் பெவிலியன் திரும்பினார்.
கடின இலக்கு
அடுத்து மொயின் அலியுடன் சிவம் துபே இணைந்தார். மீண்டும் அணியின் ஸ்கோர் உயர, மொயின் அலி 35 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் 27 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுமுனையில் நிலைத்து விளையாடிய சிவம் துபே 49 ரன்களில் வெளியேறினார். இச்சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரானது, 189 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பின் களம் இறங்கிய ரவீந்திர ஜடஜா 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடந்தப் போட்டியில் அரை சதம் அடித்த தோனி இப்போட்டியில் 6 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்து இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இருபது ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏழு விக்கெட்டுக்கு 210 ரன்கள் எனும் அதிக ஸ்கோரை எட்டியது.
தலா இரண்டு
லக்னோ அணியின் சார்பில், ஆவேஷ்கான், ஆண்ட்ரிவ் டை, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கு அடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
லக்னோ அணியின் வெறித்தனம்
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கி சென்னை அணியை கலங்கடித்துவிட்டார்கள். ஆம்! லக்னோ அணியின் ஸ்கோர் 99 ரன்களாக இருந்தபோதுதான் முதல் விக்கெட்டை இழந்தது. கே.எல்.ராகுல் 26 பந்துகளுக்கு நாற்பது ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன்பின் களமிறங்கிய மணிஷ்பாண்டே 5 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினார்.
ஆனால், குயின்டன் டி காக் உடன் இணைந்த எவின் லூயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்னோ அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். குயின்டன் டி காக் 60 ரன்களில் ஆட்டக்களத்தைவிட்டு வெளியேறினார்.
ஆம்! தீபக் ஹூடா 18 ரன்களில் வெளியேற, எவின் லூயிஸ் மட்டும் 23 ரன்களில் 55 ரன்கள் எடுத்து லக்னோ அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 211 என்கிற கடின இலக்கை லக்னோ அணியானது நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.3 ஓவர்களிலேயே எட்டிவிட்டது.
இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதானது, அதிரடியாக ஆடிய எவின் லூயிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சென்னை அணி தொடர்ந்து இரு போட்டிகளிலும் தோற்றுள்ளதும், லக்னோ அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.