சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. அங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளது. இந்தத் தெருவில் இருந்த 625 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டன. மீதம் உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை உதவியுடன் இளங்கோ தெருவில் உள்ள வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.
அப்போது அங்கு வீடு கட்டியுள்ளவர்களில் ஒருவரான கண்ணையன் என்பவர் தீக்குளித்தார்; மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அங்கு வீடு கட்டியுள்ளோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் காலின் கான்சால்வஸ், “ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடிக்கும் போது, ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். இதனால், மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ”ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக தமிழக முதல்வர் கூறினாலும், அந்த இடம் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது,” என வாதிட்டார்.
இதனை அடுத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
- முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நோட்டீசைப் பெற்று கொள்ளுங்கள். வேண்டுமெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அறிவுறுத்தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும்.
- மேலும், தற்போது முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகின்றீர்கள், எனவே அது உறுதிமொழி தானே அவ்வாறு தெரிவித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது.
- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்கப் போவதில்லை. ஏற்கனவே பல குடும்பம் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது.
- உரிய பாதுகாப்பைப் பயன்படுத்துங்கள், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக எங்கள் உத்தரவை அமல்படுத்துங்கள். அதேவேளையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மனுதாரர்களை மாற்றலாம்.
- மேலும், அடிப்படை வசதிகளையும் இந்த மக்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கிலானது என்றே கருதுகிறோம்.
எனவே, ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.