கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகள் போராட்டத்தை கைவிட ஒப்புதல் அளித்துள்ளதாக மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதினர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் அத்தலைவர் குமாரி இன்று கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
சுமார் 5 மணி நேரமாக பாலியல் புகார் குறித்து 12 மாணவிகளிடம் நேரடி விசாரணை அண்டத்தியதாகவும், 5 மாணவிகளிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து இருப்பதாகவும், அதை வருகிற திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ மாணவிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாலும், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் காரணமாக மாணவிகள் போராட்டத்தைக் கைவிட ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்