சென்னை: சென்னை கிண்டி பகுதியில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை என இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல் ஹப்லிஸ் அருகே, உள்பக்கமாக செல்லும் சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக, அந்தப் பகுதியில், ஜூலை 9-ம் தேதி (சனிக்கிழமை), ஜூலை 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றமானது, சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரையிலும் அதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணி வரையிலும் அமலில் இருக்கும்.
இதன்படி, விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகனங்கள், கத்திப்பாரா பாலத்தின் மீது நேராக சென்று சிப்பெட் சந்திப்பில் வலது புறமாக திரும்பி, திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று அண்ணா சாலை செல்ல வேண்டும்.
அதேபோல், பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எந்தவிதமான மாற்றமும் இன்றி, வழக்கமான கத்திப்பாரா வழியாகவே செல்லலாம்.
மேலும், வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது புறம் திரும்பி, திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று, அண்ணா சாலைக்கு செல்லலாம்.
இவ்வாறாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.