சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து கடலூரைச் சேர்ந்த முருகன் என்ற நபர் வந்தார். அவர் மீது சந்தேகித்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் பேண்டில் அணிந்திருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து 25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் சோதனை செய்து பார்த்ததில், அங்கிருந்த கழிப்பறையில் கிடந்த ஒரு பார்சலில் 9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஒரே நாளில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதோடு, முருகனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.