இதுவரை 2,255 குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை காவல்துறை ‘Drive Against Rowdy Elements (DARE) என்ற ஆபரேஷனை செய்து வருகிறது. இந்த DARE ஆபரேஷன் மூலம் தலைநகர் சென்னை நகரை குற்றமில்லா நகரமாக மாற்ற சிறப்பு திட்டங்கள், சோதனைகள் போன்றவை சென்னை காவல்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், DARE ஆபரேஷன் படி திடீரென்று நேற்று இரவு சென்னை மாநகர் முழுவதும் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட இந்த ரெய்டானது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரிலும், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரிலும், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பிலும் நேற்று சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் கொலை முயற்சி, இரண்டுக்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 490 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மொத்தமாக, இதுவரை 2,255 குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 207 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.