சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் தாமதமானதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
சென்னையை பொறுத்தவரையில் லோக்கல் ரயில் சேவை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இயல்பாக லோக்கல் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பலர் ரயிலின் நேரத்தை வைத்துதான் தங்களின் அலுவல்களை திட்டமிடுகின்றனர்.
இப்படியான சூழலில் ரயில்கள் தாமதமாகும் நேரங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக நேருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ‘லோக்கல் ஃபாஸ்ட்’ எனப்படும் விரைவு ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக புறப்பட்டு மக்களை அவதிக்குள்ளாக்கியது பெரும் பேசுபொருளானது.
இதையும் படிங்க: ரூ.850 கோடி செலவில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயில் புனரமைப்பு திட்டம்-பிரதமர் மோடி அறிவிப்பு
இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் சுமார் 8.15 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நடைமேடை மூன்றில் வந்தது. 8.20 க்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய ரயில் வெகுநேரமாக புறப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை வரை செல்லும் மின்தொடர் தாமதமாகியுள்ளது என்றும், 3-வது பிளாட்ஃபாரமிற்கு பதிலாக 4-வது பிளாட்ஃபாரமில் உள்ள மின்தொடர் புறப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் மக்கள் பெரும் எரிச்சலுக்குள்ளாகினர்.
பலரும் அலுவலகத்திற்கு செல்லும் நேரமென்பதாலும், 30 நிமிடங்களுக்கும் மேல் ரயில் இல்லாததாதாலும் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இது போன்ற நிகழ்வு அவ்வபோது நிகழ்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.