நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்து, மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு மற்றும் ராதாரவி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், கன்னடப் படமான அபமித்ராவின் ரீமேக். ஆனால், அபமித்ரா மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் ரீமேக்காக இருந்தது.
சந்திரமுகி திரைக்கு வந்த பின், ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இதனை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது லைகா தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில், வைகை புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய மிகப் பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிப்பது படத்திற்கு கூடுதல் அம்சமாகும். இப்படத்தையும், ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு தான் இயக்கப் போகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களுடைய மேற்பார்வையில் உருவாக இருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை, பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்க இருக்கிறார்.
‘பாகுபலி’ மற்றும் ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தான், சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆர். டி. இராஜசேகர் ஒளிப்பதிவு பணியை செய்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராக இருக்கும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடிப்பாரா என பலரும் கேட்டு வரும் நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில், சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஜோதிகா இல்லாமல் இரண்டாம் பாகம் தயாராகும் நிலையில், இந்தப் படம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவரும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.