சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 24) நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 24) முதல் நாளை மறுதினம் வரை, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைப் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.