இந்தியாவில் பிஎஃப்.7 வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
உலக நாடுகளில் அதிகம் பரவி வரும் வைரஸாக பிஎஃப்.7 வகை வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதாக தெரிந்துள்ளது. இதையடுத்து, மத்திய சுகாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்குமாறும், நாடு முழுவதும் காய்ச்சல் போன்றவற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் கண்காணிக்குமாறும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வார இறுதியில், பண்டிகை நாள்கள் தொடங்கவிருப்பதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெகு சிலர் மட்டுமே முகக்கவசம் அணிவதாகவும், கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.