சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த இருக்கும் வேலம்பட்டி, எம்.ஜி.ஆர் பகுதியைச் சார்ந்தவர் பிரபாகரன் (33). இவரது தம்பி பிரபு (29). இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி காலை பிரபாகரன் அவரது வீட்டின் அருகே இருக்கும் நீர்த்தேக்க தொட்டியின் பக்கத்தில் துணி துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் சின்னசாமி அங்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து சென்ற சின்னசாமி, பிறகு சிறிது நேரம் கழித்து 10 க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வந்து பிரபாகரன் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபு, ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 16 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபு உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நாகரசம்பட்டி காவல்துறையினர், திமுகவைச் சேர்ந்த சின்னசாமி உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இதனிடையே தமிழ்நாடு பாஜக சார்பில், ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதன் காரணமாக, திமுக அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி மிகப்பெரிய அளவில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. நேற்று மாலை பேரணியாக சென்ற பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணிக்கு தலைமை தாங்கிய கரு.நாகராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘நான் ரெடி’ – ஐபிஎல் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் பேட்டி!