ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தத் தொகுதியில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. மேனகா கடந்த 20 ஆம் தேதி உரிய அனுமதி பெறாமல், ஆலமரத்தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேனகா மீது மட்டுமின்றி, மேலும் 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நான் ரெடி’ – ஐபிஎல் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் பேட்டி!