பாராளுமன்றத்தில் உள்ள லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தில் திமுக எம்பி செந்தில்குமார் கேட்ட கேள்விக்கு, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கேட்ட பதில் கேள்வியினால் சிறு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தருமபுரி தொகுதி எம்பி செந்தில்குமார் மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர்கள் இந்தியில் வைக்கப்படுவதைப் பற்றி பேசினார். பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரின் அர்த்தம் என்ன என்று எனக்கு நீங்கள் விளக்கியே ஆக வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகிய எங்களுக்கே இந்த பெயரின் அர்த்தம் புரியவில்லையே, சாதாரண எளிய மக்களுக்கு எப்படிப் புரியும் ? என கடுமையாகப் பேசினார். மேலும், மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு இந்தி மொழியிலேயே பெயர்கள் வைக்கப்படுகிறதென்றும், இப்படி யாருக்கும் புரியாத மொழியில் பெயர் வைத்து என்ன சாதிக்க போகிறீர்கள் என்றும், நீங்கள் இப்படி யாருக்கும் புரியாதது போல் பெயர் வைப்பது ஒருவிதத்தில் எங்களுக்கு நல்லதுதான் என்றும் பேசினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, தமிழகத்தைச் சேர்ந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் பிரதம மந்திரியின் பெயரில் இருக்கும் பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயர் புரியவில்லை என்று கூறுகிறார். அவர் பேசுவது கூடத்தான் எனக்கு புரியவில்லை என்று கூறினார். ஆனால், அவருக்கு இதே திட்டம் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பெயரில் இந்திரா ஆவாஸ் யோஜனா என்று இருந்தபொழுது புரிந்துள்ளது. தற்பொழுது உள்ள பிரதம மந்திரியின் பெயரில் உள்ளதால் புரியவில்லை போல என்று கூறினார். இந்த திட்டத்தின் அர்த்தம் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் புரியும்பொழுது, உங்களுக்கு மட்டும் தான் புரியவில்லை என்றும் கூறினார்.
இந்த திட்டங்களுக்குச் சிறிதும் தாமதம் செய்யாமல் மத்திய அரசு நிதியை ஒதுக்கிக் கொண்டு இருக்கிறது. உங்களுடைய மாநிலங்களில் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை எனில் அதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கூறினார்.