கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டின் சுற்று வட்டாரப் பகுதிகளில் தண்ணீர்தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் இது தொடர்பான வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளான, பட்டாம்பி மற்றும் கூட்டநாடு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளின் மேற்பரப்பு தீப்பிடித்து எரிந்து வருகின்றது. இதனைத் தீயணைப்புத்துறை அதிகாரிகளும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மற்றும் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தான் முதன் முதலாக அப்பகுதி மக்கள், அந்தப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் வாசனை வருவதைக் கண்டறிந்துள்ளனர். உடனே, அந்தத் தண்ணீரை அங்குள்ள உள்ளூர் ஆராய்ச்சிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்ததில் தண்ணீரில் மினரல்கள் இருப்பதாகவும் எனவே இந்தத் தண்ணீரானது பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
சிறிய காகிதத்தில் நெருப்பை பற்ற வைத்து கிணற்றின் உள்ளே தூக்கி வீசினால் உடனே நீலநிறத்தில் நெருப்பு வெளிப்படுகிறது. மேலும், அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள கிணற்றின் மேற்பரப்பில் மஞ்சள் நிறத்தில் ஒரு படலமும் காணப்படுகிறது. இது, அங்குள்ள தண்ணீரில் பெட்ரோல் அல்லது இயற்கை வாயுக்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சோதனை செய்த உணவுத்துறை அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு தோலில் கடுமையான அரிப்பு ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் இந்தத் தண்ணீரை குடிப்பதற்கோ துணிகளைத் துவைப்பதற்கோ பயன்படுத்துவதில்லை. ஏற்கனவே, அப்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வரலாறு காணாத அளவுக்கு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் வெயில் சுட்டெரித்தும் வருகிறது. இதனால், அப்பகுதி கேரள சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷின் உத்தரவின் அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.