ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
மராட்டிய மாநிலம், மும்பையில் இதுகுறித்து நடந்த கூட்டத்தில் வேலைநிறுத்தம் சார்பான முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராமல் இருப்பதன் காரணமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச் வெங்கடாசலம் கூறுகையில், வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாகவும், நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால், தற்போது வரை அது போடாததன் காரணமாக புதிய ஊதிய விகிதம் தொடர்பாக வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 ஆம் தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அப்போது வெறும் 2 சதவீத ஊதிய உயர்வு தான் வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் வெங்கடாசலம் கூறினார். இதன் காரணமாக தான் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன்படி, ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வலையில் சிக்கிய 3 கிலோ கல் நண்டு; வயிற்றில் முட்டைகள் இருந்ததால் நடவடிக்கை