சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
வங்கதேச இருபது ஓவர் அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தற்போது உள்ளார். இவரின் தலைமையிலான வங்கதேச அணிக்கும், அயர்லாந்து அணிக்கும் இருபது ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
மழையின் காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
வங்கதேச அணித்தரப்பில், அணியின் கேப்டன் ஷகிப், 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இந்த விக்கெட்டுகளின் மூலம் ஷகிப் அல் ஹசன் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
36 வயதான ஷகிப் 114 இருபது ஓவர்போட்டிகளில் விளையாடி மொத்தம் 136 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேநேரம் இருபது ஓவர் கிரிக்கெட்டில் இதுவரையில் 2,339 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இருபது ஓவர் கிரிக்கெட் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் அவர் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு; மேலும், 43 சவரன் நகைகள் மீட்பு