ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கை ஆகிய அறிக்கைகள் நேற்று முன்தினம் (அக்டோபர் 18) தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ஒரு சிக்கன் பிரியாணிக்காக ஓட்டலையே கொளுத்திய நபர்? கோபக்கார கஸ்டமரின் வைரல் வீடியோ
அப்போது அவர் பதில் அளித்ததாவது:
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேர்த்தியாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி.
ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை. அதே சமயம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாடமாக வைத்து காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் மனித உயிர்களை கண்மூடித்தனமாக தாக்குவது என்பதே தவறு. அதிலும் சுட்டுக் கொல்வது உச்சகட்டமான ஒன்று. அதனால், காவல்துறை இதை ஒரு படிப்பினையாக ஏற்று இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் புது வைரஸ் பரவல்; மத்திய சுகாதரத்துறை எடுத்துள்ள முடிவென்ன?