தனது இசைப்படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து ரஹ்மான் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அவரது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஆணையர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “இசை படைப்புகளின் காப்புரிமையானது பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். அதற்கு என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம். இந்த உத்தரவானது தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது“ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், “வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று உயர்நீதிமன்றம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், ஜிஎஸ்டி ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜிஎஸ்டி மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-இல் நடந்த குண்டுவெடிப்பு; இன்று தொடங்கிய விசாரணை!