ஆந்திரப் பிரேதசத்தில் நெல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கோட்டம்ரெட்டி ஶ்ரீதர் ரெட்டி கழிவு நீரில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த நெல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கோட்டம்ரெட்டி ஶ்ரீதர் ரெட்டி கட்சித் தலைவர்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை உம்மாரெட்டிகுண்டா பகுதியில் உள்ள 20 இடங்களில் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
அச்சமயத்தில், உம்மாரெட்டிகுண்டா பகுதியில் ரயில்வே தண்டவாளத்துக்கு அருகிலுள்ள கழிவுநீர் வடிகால் நீண்ட நாள்களாக தூர்வாரப்படாததால் துர்நாற்றம் அடிக்கிறது என்றும், கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறதென்றும் எம்.எல்.ஏ கோட்டம்ரெட்டி ஶ்ரீதர் ரெட்டியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு சென்ற ஆளும் ஒய்எஸ்ஆர் எம்.எல்.ஏ மற்றும் கட்சித்தலைவர்கள் கழிவுநீர் உள்ள பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதன்பின்பு, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே துறை அதிகாரிகள், 10 நாள்களில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும், எம்.எல்.ஏ கோட்டம்ரெட்டி ஶ்ரீதர் ரெட்டி, கழிவுநீர் வடிகால் விரைந்து தூர்வாரப்படவில்லை என்றால் மீண்டும் கழிவுநீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.
வரம்பு மீறியதா இந்திய அரசு?- வழக்கு தொடர்ந்த ட்விட்டர்