மீனவர்கள் அந்நிய நாட்டவர்களால் கைது செய்யப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை பகுதியில் மட்டுமே நிகழும் மீனவர்களின் கைது தற்போது செஷல்ஸ், இந்தோனேஷியா என நீண்டுள்ளது.
ஆம்! கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 தமிழக மீனவர்கள், 6 வட இந்திய மீனவர்கள் என 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்திலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற மேலும் 33 மீனவர்கள் கடந்த ஏழாம் தேதி செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்தோனேஷிய எல்லைக்குள் நுழைந்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களின் கைது குறித்து பதிவிட்டுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்கள் தமிழக மீனவர்களின் நோக்கம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதோ, சட்டவிரோத செயல்களை செய்வதோ அல்ல என்றும் வாழ்வாதாராம் ஈட்டுவதற்காக சென்ற அவர்கள் எல்லை தெரியாமல் தான் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று விட்டனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.