கச்சத் தீவில் வருடா வருடம் மார்ச் மாதம் புனித அந்தோனியார் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும் கச்சத் தீவு திருவிழா மத நல்லிணக்கத்துக்காகவும் இந்தியா-இலங்கை இவ்விரு நாடுகளின் ஒற்றுமைக்காகவும் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் பங்கேற்க இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 80 பக்தர்கள் மூன்று விசைப்படகுகளுடனும் ஒரு நாட்டு படகுடனும் இன்று காலை ஒன்பது மணிக்கு சென்றுள்ளனர்.
இத்திருவிழாவில் கச்சத் தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு புனித அந்தோனியார் உருவம் வடிவமைக்கப்பட்ட கொடி ஏற்றம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் தேர்பவனி நடைபெற உள்ளது. மேலும் நாளை காலை ஏழு மணிக்கு சிறப்பு திருப்பலி நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
இதனிடையே, இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக் நீரிணை பகுதியில் தமிழர்கள் மீன் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்ற ஆண்டுகளில் கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக இத்திருவிழா நடக்காமல் இருந்தது. மேலும் சில வருடங்களாகவே இலங்கை அரசு தமிழக பக்தர்களைக் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. மாநில மத்திய அரசுகள் வைத்த கோரிக்கையின் பேரில் 80 பக்தர்களுக்கு மட்டும் இந்தாண்டு அனுமதி அளித்தது இலங்கை அரசு.