சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பெரும் பரபரப்பிலும் ஊழலுக்கு காரணமான துணை ஆணையர்-1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிகழ்வு தற்போது பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இப்படியான ஒரு நிகழ்வை பேசாமல் இருக்கையில், அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இடமாற்ற நிகழ்வு அதிர்ச்சயளிப்பதாக கூறி தன் அறிக்கையை ஆரம்பித்துள்ளார்.
மேலும், அவர் தன் அறிக்கையில், பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது என்றும் பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தார். காவல்துறை அவர் மீது வழக்கும் பதிவு செய்திருப்பதையும் அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர் என்ற நிகழ்வையும் அன்புமணி இரமாதாஸ் நினைவு கூர்ந்தார்.
கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருப்பது பெரும் அநீதி என்றும் தன் அறிக்கையில் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டார்.
“ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.