தமிழகத்தில் தீர்வு காணப்பட்ட பிரச்சினைகளை சுலபத்தில் எண்ணிவிடலாம். ஆனால் தீர்க்கப்படாமல் நெடுங்காலமாக நீளும் தமிழர்களுக்கு நிலவும் பிரச்சினைகளை பட்டியலிடுவது கடினம். ஆம்! அவ்வளவு இருக்கிறது. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இலங்கை – தமிழக மீனவர் பிரச்சினையை சொல்லலாம். தொன்றுதொட்டு பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப்போல, இலங்கை – தமிழக மீனவர் பிரச்சினையும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார் .
அதோடு, பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது என்றும் இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிங்களக் கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.