தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இச்செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரனி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை எனவும் மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது’ எனவும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? என கேள்வியும் எழுப்பியுள்ளார், அன்புமணி ராமதாஸ்.
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.