உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முடிந்த பிறகு, இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு முன்பாகவே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டியது. ஆனால், பலருடைய எதிர்ப்பால் அப்போது செயல்படுத்த முடியாமல் போனது. அதன் பிறகு, கொரோனா வைரஸ் உலகை வாட்டி வதைக்க, அனைவரது பார்வையும் கொரோனா மீதே இருந்தது. இந்நிலையில் தான் அமித்ஷா இந்தச் சட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று கொல்கத்தாவில் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, இரண்டு நாட்கள் பயணமாக மேற்கு வங்காளத்திற்கு சென்றார். கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அமித்ஷாவை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், அங்குள்ள சிலிகுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) மத்திய அரசு விரைவில் செயல்படுத்தும். களத்தில் செயல்படுத்தபடாது என குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி, திரிணாமுல் காங்கிரஸ் சில வதந்திகளை பரப்பி வருகிறது. ஆனால் கொரோனா அலை முடியும் தருணத்தில், நாங்கள் நிச்சயமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவோம் என நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா சகோதரி ஊடுருவலை விரும்புகிறார். எப்படி ஆயினும், குடியுரிமை திருத்தச் சட்டம் நிச்சயம் நிறைவேறும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு முன்பாக ஹரிதாஸ்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித்ஷா பேசினார். அதில், நாட்டின் உள் பாதுகாப்பு மற்றும் வெளி பாதுகாப்பை ஊடுருவ முடியாத பாதுகாப்பான வகையில் உருவாக்குவதே மத்தியில் ஆளும் மோடி அரசின் இலக்கு.
எல்லை பாதுகாப்பிற்காக உலகின் மிகவும் அதிநவீனமான தொழில்நுட்பத்தை, நமது இராணுவ வீரர்களுக்கு வழங்க நாங்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகிறோம். இன்று சட்லஜ், காவேரி மற்றும் நர்மதா மிதக்கும் பி.ஓ.பி. தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் பணியில் உள்ள நமது இராணுவ வீரர்கள், மிகக் குறைந்த அளவிலான சிரமத்தை எதிர்கொள்வதில் மோடி அரசு உறுதித் தன்மையுடன் உள்ளது. இராணுவ வீரர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றியமைக்க, நாங்கள் எந்தவித வாய்ப்பையும் விட்டுவிடாமல், பயன்படுத்தி அவர்களை காப்போம் என அமித்ஷா தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் குழப்பங்கள்: முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!