நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறியிருப்பதாவது:
“கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள் என தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு உரிமை சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் பெண்களின் அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் பறிக்கிறது. பெண்களின் அடிப்படை உரிமையை பறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று பிழையை இழைத்து விட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்கள் அமெரிக்காவை இந்த தீர்ப்பு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது” எனவும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘அறிவினை விரிவு செய்’- கல்லூரிக் கனவு நிகழ்ச்சியினைத் துவங்கி வைத்துள்ள தமிழக முதல்வர்!!